Thursday 28 April 2011

சிந்திக்கச் சில.........


1.குறைபாடுகள்  உடையவ
ன்தான் மனிதன். குறை காண்பனும்  மனிதன்தான். பிறர் குறைகளைத் தேடுபவன் அரை மனிதன். தன் குறைகளைத் தேடுபவன் முழுமனிதன்.

2.பிறர் குறைபாடுகளை நம் கண் முன்னே காண்கிறோம். நம்குறை பாடுகளை மறைக்கின்றோம்.

3.மலர்களில் மணம் கமழுவது போல் நல்வினையால் புகழ் பரவும்.

4.கொடுப்பதால் நாம் செல்வம் பெருகும்; பெற்றுக் கொள்வதால் அன்று.

5.கருத்துடன் காண இரு கண்களூம் கருத்துடன் கேட்க இரு காதுகளும் குறைவாகப் பேச ஒரு நாக்கும் உள்ளன.

6.மிகப் பெரிய வெள்ளமும்  வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

7.கோபம் ஆறக் கூடியது. வெறுப்பு ஆறாது.வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்.

8.நம்மிக்கை இல்லாத வழிபாடு உயிரற்றது.

9.இரக்க குணம் மனிதனை உருவாக்குகிறது. அரக்க குணம் மனிதனை மிருகமாக்கிறது.

10.நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்.

11.அன்பு  உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்.

12.அன்பும் அறனும் இல்லாதவன் இறந்தவனுக்குச் சமம்.

13.அருட் செல்வத்தைப் பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னனாக சீரும் சிறப்புமாக‌ வாழலாமே!

14.தீய எண்ணங்களை அழிக்க  இறைவழிபாட்டைத் துணயாகக் கொள்.

15.சரியான கருத்துகள் மனதில் இருந்தால் நல்ல எண்ணம், இனிமையான சொல், சுகம் தரு
ம் செயல்கள் தோன்றும்.

Wednesday 27 April 2011

எது சிறந்த தானம்?

தானத்தில்சிறந்த தானம்
நற்செயலில் சிறந்த நற்செயல்
அன்பில் சிறந்த அன்பு எதுவென்றால்
அறம்  ‌அறியாமல் வாழ்வோருக்கு
மீண்டும் மீண்டும் அறத்தை உபதேசம் செய்து,
அவர்களையும் அறநெறியில் ஒழுகச் செய்வதுவும்,
பக்தி இல்லாமல் வாழ்வோருக்கு
மீண்டும் மீண்டும் பக்தியை உபதேசம் செய்து
அவர்கள் உள்ளத்தில் பக்தியை பதிய வைப்பதுவும்,
அறிவும் ஒழுக்கமும் இல்லாதோருக்கு
கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதுவும்;
அருளில்லாதோருக்கு அருளை உபதேசம் செய்வதுவும்;
அதுவே, தானத்தில் சிறந்த தானம்
நற்செயலில் சிறந்த நற்செயல்
அன்பில் சிறந்த அன்பு
                                                                                           பகவான் புத்தர்

Tuesday 26 April 2011

நம் பலவீனங்கள்

நம் அனைவருக்கும் பல பலவீனங்கள் உண்டு. ஆதலால் தவறுகள் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. நாம் அனைவருக்கும் விருப்பும் வெறுப்பும் அறியாமையும் உண்டு. ப‌லவீனங்கள் நம் எல்லாரிடமும் வெவ்வேறு அளவில் விளங்குகின்றன.

அறியாமையில் வாழும் ஒரு மனிதனின் அருகில் சென்று பார்ப்போம். அவரது மனம் தொந்தரவுகளாலும், குழப்பங்களாலும், இருளாலும் தெளிவிழந்து  உள்ளதைக் காணலாம்.. எதிர்பாராத மாற்றங்களால் உண்டாகும் மாற்றங்களும் நிறைவேறாத ஆசைகளும்  கவலையை ஊண்டாக்குகின்றன.

கவலையை உண்டாக்கக் காரணமாக உள்ள ஆசை எனும் உந்துதலை ஊட்டி  வளர்ப்பதற்கு முக்கிய காரணம் அறியாமையே!  அறிவால் அறியாமையை அகற்றப்படும் பொழுது அச்சமும் கவலையும் மறைகின்றன.

யாரையும் குறை கூறாமல் தவறு எங்கே என்று தேட வேண்டும். சிக்கல்களைப் பிற இடத்தில் தேடுவதில் பயன் ஏது? பலவீனங்களை ஒத்துக் கொள்ள வேண்டும். மனிதன் ஏதேனும் காரணங்கள் கண்டுபிடித்து தனது செயல்களை நியாயப்படுத்தி தான் மாசு அற்றவன் என் போலி தோற்றத்தை உருவாக்க முயல்கிறான்.

பிறர் குற்றம் காண்பது எளிது.அறிதேயாம் தன்குற்றம் காண்பது. குற்றம் சாட்டப்படாதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. உங்களுக்கு உள்ளது பெரிய பிரச்னை என்றால் அதை சிறிதாக்கமுயலுங்கள்.சிறிய பிரச்னை என்றால் அதை இல்லாததாக்க  முயலுங்கள்.

Monday 25 April 2011

திட்டமிட்ட செயல்களும் வினைப்பயனும்

நாம் திட்டமிட்டு வேண்டுமென்று செய்யும் செயல்களின் வினைப்பயனிலிருந்து தப்ப முடியாது.

நாம் மனதால் விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குக் கரும பலன் உண்டென்றும், அவற்றின் கருமபலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை என்றும் பகவான் புத்தர் கூறியுள்ளார்.

"திட்டமிட்டுச் செய்த கருமங்களின் பலனை அழிக்க முடியாது; கரும பலனிலிருந்து தப்ப முடியாது; அவற்றின் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. இந்த உலக வாழ்விலோ, அல்லது எதிர்கால பிறப்பிலோ அவற்றின் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. திட்டமிட்டுச் செய்த தீய கருமங்களின் துன்பப் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.

திட்டமிட்ட செயல்கள் என்பது, நாம் மனதால் விரும்பி வேண்டுமென்று செய்யும் செயல்களாகும். அதாவது நாம் மனதால் விரும்பி எண்ணும் எண்ணங்களும்,மனதால் விரும்பி பேசும்  சொற்களும், மனதால் விரும்பி உடலால் செய்யும் செயல்களும் வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களாகும்.

நாம் மனதால் விரும்பி, திட்டமிட்டுச்   செய்யும் செயல்களின் கரும பலன்களிலிருந்து தப்ப முடியாது. என்கிறார் பகவான் புத்தர். அவை நற்செயல்களாயினும், தீய செயல்களாயினும், அதன் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.இப்பிறப்பிலோ அல்லது எதிர்கால பிறப்பிலோ, அவற்றின் பலனைஅனுபவிக்கத்தான் வேண்டும்.

விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தீய செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு லாபமும், இன்பமும் கிடைத்தாலும், பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்கால பிறப்புகளிலோ,அதன் துன்பப்பயனை வருந்தி, புலம்பி, அனுபவிக்கத்தான் வேண்டும். விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நல்ல  செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு நஷ்டம் வந்த போதும் ,பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்க்கால பிறப்புகளிலோ,அதன் புண்ணியப்பயனை  இன்புற்று, மகிழ்வுடன் அனுபவிப்பான்.

வினை பயனிலிருந்து தப்பமுடியாதாகையால், துன்பத்தை விரும்பாதவன், எவரொருவருக்கும் துன்பம் தரும் செயல்களைச் செய்யக்கூடாது  என்கிறார் பகவான் புத்தர்.

"எவரொருவர் துன்பப்பட விரும்பவில்லையோ, அவர் தீய  செயல்களைச் செய்யக்கூடாது. இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்."

Thursday 14 April 2011

விரதம் சிறந்த உபாயம்

நம் குறைபாடுகளைப் போக்க  விரதம் சிறந்த உபாயம்
(துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

நம் குறைபாடுகள் நம் சுகத்தை கெடுக்கும்; நம் நல‌னைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் மன அமைதியைக் கெடுக்கும்; மனம் சஞ்சலம் உண்டு பண்ணும்; அது நம் உள்ளிருந்தே கொள்ளும் வியாதி.

எவை நம் குறைபாடுகள்?
1. உண்மைக்கு மாறான பேச்சு.
2.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்.
2.நட்புடையோரிடம் பொய் பேசுதல்; ஏமாற்றுதல்.
3.க‌டுஞ் சொல் பேசுதல்.
4.பிறர் மனம் புண்படும்படி பேசுதல்.
5.சினம்கொண்டு பேசுதல்; தீங்கு செய்தல்.
6.செய்ய இயலாதவற்றை செய்வேன் என கூறுதல்.
7.வெற்றிபெற வெகுண்டு பெசுதல்.
8.பிறரைப் பழித்துப் பேசுதல்.
9.நல்லோரின் நல்லொழுக்கத்தைப் பரிகாசம் செய்தல்.
10.எளியார் என் பிறரை ஏளனம் செய்தல்.
11.எளிறோரை வருத்துதல்.
12.நட்புக்குரியோரைப் பற்றி பழித்துப் பேசுதல்.
13.பலருக்குமுன் ஒருவரை இகழ்ந்து பேசுதல்.
14.பிறர் செல்வாக்கைக் கண்டு பொறாமைப் படுதல்.
15.பொறாமையால் குற்ற‌மற்றோர்மீது குற்றம் சாட்டுதல்.
16.குற்றம் செய்தும் அது நியாயமானதே என வாதிடுதல்.
17.நம் குற்றத்தை மறைக்க பிறர்மீது பழி சுமத்துதல்.
18.நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்தல்.
19.தற்பெருமையால் தம்மை உயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் பேசுதல்.
20.நான் எனும் அகந்தையில் பிறரை அலட்சியப் படுத்தி அவமதித்தல்.
21.சண்டை சச்சரவு செய்தல்.
22.வம்பு வளர்த்தல்.
23.வீண்பிடிவாதம் செய்தல்.
24.வஞ்ச மனதுடன் பிறரை ஏமாற்றுதல்.
25.பிறர் பொருள்மீது ஆசை.
26.பொருள் இருந்தும் கொடுக்க மனமில்லை.
27.பகட்டையும் ஆடம்பரத்தையும் கண்டு மயங்குதல்.
28.தீயொழுக்கங்களின் புலன்கள் இன்பம்நாடுதல்.
29.துன்பத்தில் உள்ளோருக்கு உதவாமை.
30.நீதிநெறிகள்,சட்ட விதிகளை அலட்சியம் செய்தல்.
31.வேண்டியவர்,வேண்டாதவர் என பாகுபாடு பார்த்தல்.
32.மதிப்புக் குறிரோதை மதியாமல் இருத்தல்.
33.நல்லோரின் அறிவுரையை அலட்சியம் செய்தல்.

இதுபோன்று இன்று,நேற்று கடந்த காலங்களில் எவ்வளவு தவறுகள் செய்திருப்போம். தீவிர முயற்சி மேற்கொள்ளாததால் மீண்டும் மீண்டும் அதே குறைகளைத் தினம் தினம் செய்து மனநிம்மதி இன்றி வாழ்கிறோம்.

ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?
நம் எண்ணங்களில் ஒழுக்கமில்லை;அறமிலலை;தூய்மையில்லை;
நம் சொற்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;
நம் செயல்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;

இதன் முடிவுதான் என்ன?

சுகம் எங்கே,  சுகம் எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும். நிம்மதி எங்கே,நிம்மதி எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும்.சாந்தி எங்கே, சாந்தி எங்கே  என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து  நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும்.;

 நம் குறைபாடுகள் நம்மிடையே உள்ளன என்பதை ஏற்காதவர்கள் பலர். அவர்கள் உண்மையை அறியாதவர்கள்; ஏற்காதவர்கள்; அறியாமையில் உள்ளவர்கள்.

தமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு அவர்கள்  கூறும்  காரணங்கள் என்ன?

1.பிறந்த நேரம் சரியிலலை.
2.கிரகங்கள் சரியில்லை.
3.எல்லாவற்றிக்கும் காரணம் விதிதான்.
4.மனைவி பிள்ளைகள் சரியில்லை.
5.பெயர் பொருத்தம் சரியில்லை.
6.ஜாதகப் பொருத்தம் சரியில்லை.
7.பிறந்த நேரம் சரியில்லை.
8.பெயர் எண் சரியில்லை.
9.வீட்டின் திசை சரியில்லை.
10.வீட்டின் எண் சரிய்ல்லை.
11.வீட்டின் அமைப்புசரியில்லை.
12.அணியும் ஆடையின் நிறம் பொருத்தமில்லை.
13.மோதிரக்கல்  பொருத்தமில்லை.
14.தோஷம் பிடித்துள்ளது.
15.செய்வினை செய்துள்ளார்கள்.

இது போன்ற் காரணங்கள் பல கூறி பரகாரங்கள் தேடுவார்கள்.
நம் உள்ளே இருக்கும் குறைபாடுகளைக் காண  மாட்டார்கள்.

நம் குறைபாடுகளை விலக்குவதற்கு விரதம் ஒரு சிறந்த உபாயமாகும். வாழ்வில் சுகமும், நிம்மதியும், சாந்தியும் பெற விரும்புவோர் தம் குறைபாடுகளைத் தேடி,அவற்றை விட்டுவிட வேண்டும்.

மனமாசுகளைப் போக்க விரதம் ஓர் உபாயம். விரதம் சிறந்த பயிற்சி.









இறைவழியில் நிற்ற‌ல்

இறைவழியில் நடப்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்:
1.அனைவரிடமும் அன்பாய் நடந்து கொள்கிறோமா?
2.எதையும் அறிவு பூர்வமாக அணுகுகிறோமா?
3.எப்போதும் எளிமையாகவும், இனிமையாகவும்  இருக்கிறோமா?
4.எதைச் செய்தாலும் திருத்தமாக, பார்ப்பவர் பாராட்டும் வண்ணம் செய்கிறோமா?
5.அறநெறியை உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்கிறோமா?
6.எல்லாவற்றிலும் லாபத்தைப் பார்க்காமல் வள்ளல்  தன்மையோடு நடந்து கொள்கிறோமா?
7.உலகிற்கு எவ்வாறு பயன் படப்போகிறோம்?
8.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறோமா?
9.நிதானமும் பொறுமையும் கொண்டுள்ளோமா?
10.வேற்றுமை பாராமல் பாகுபாடு  ன்றி உதவுகிறோமா?

Tuesday 12 April 2011

வெற்றி பெற்ற மனிதர்


1. பயமில்லாமல் இருப்பார்.
2. மனம் விட்டு சிரிப்பார்.
3. யாரையும் வெறுக்க மாட்டார்.
4. அனைவரையும் விரும்பி அன்பு காட்டுவார்.
5. நல்லோரின் மதிப்புப் பெற்றவர்.
6. குழந்தைகள் அவரை விரும்புவர்.
7. வேட‌ம்  போட மாட்டார்.
8. துரோகம் செய்பவர்களைக் கண்டு விலகி நிற்பார்.
9. மனம் தளர மாட்டார்.
10. பிறரின்  சிறந்த குணத்தைக் காண்பார்.
11. பிறருக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்.
12. தன் சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வார்.

நல்ல மனிதனின் குணங்கள்

1. உண்மையாக நடந்து கொள்வார்.
2.சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.
3.உதவி கேட்பவர்களைக் கைவிட  மாட்டார்.
4.செய்ய முடியாதவற்றைச் செய்ய முடியும் என் நம்ப வைக்க மாட்டார்.
5.நடிக்க  மாட்டார்.
6.பிறரைக் குறைகூறி தன் முக்கியதுவத்தை அதிகரித்துக் கொள்ள மாட்டார்.
7.தவறுகளை ஒப்புக் கொள்வார்; திருத்திக் கொள்வார்.
8.தகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார்.
9.விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டார்.
10.பிறரின் சிறிய செயலையும் புகழ்ந்து பேசுவார்; பாராட்டுவார்.

Saturday 9 April 2011

அறநீதியும் தண்டனையும்


        எந்த ஒரு செயல் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபிவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

      எவ்வகையான் செயல்கள் அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்தும்? பாவச் செயல், அதைச் செய்த பின், அதை நினைத்து மனம் வருந்தும். எவ்வகையான செயலின் பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கும்? பாவச் செயலின் பயனை அழுதுகொண்டே  அனுபவிக்க வேண்டியிருக்கும்.
      பாவ கருமங்களைச் செய்தோர், பாவம் பழுக்கும்போது, அதன் பிடியிலிருந்து தப்ப முடியாமல், "பாவம் செய்தேனே!" என் மனம் வருந்தி, அதன் பயனை அழுதுகொண்டே அனுபவிப்பார்கள்.

           பாவம் என்றால் என்ன? பாவம் என்பது, தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீங்கு செய்தலாகும்.

"தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீமை செய்தல்" என்பதன் பொருள் என்ன?

         பிறர் நமக்குத் தீங்கு செய்தால், அது நமக்கு வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்; துன்பத்தைத் தரும். அதுபோல் நாம் பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், அது பிறருக்கும் வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்;  துன்பத்தைத் தரும்.

        தீயவை நமக்குத் துன்பத்தைத் தருவது போல், பிறருக்கும் அது  துன்பத்தைத்  தரும் என்பதை மறந்து, நாம் ஒரு இலாபத்தை நாடி, பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்தவர்களாகிறோம்.

           தன் சுகத்தை நாடி, பாவம் செய்தவனுக்கு, அப்போது ஒரு சுகம் கிடைத்த போதிலும், அது பிறருக்குத் துன்பத்தைத் தரும்; பின்னால் இவனுக்குத் துன்பத்தையே தரும்.

இதையே பகவான் புத்தர் இவ்வாறு விளக்கியுள்ளார்:

 இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது  நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்ப முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்.

           ஆகவே, இப்போது நாம் பிறருக்குத் தீமை செய்தோம் என்றால்,பின்னால் நாமும் அதனால் துன்பப்படுவோம்.

திருவள்ளுவரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்:

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்"

அதாவது, துன்பம் யாவும் துன்பம் செய்தோரையே நாடும்.

இது அறநீதி.அற நீதியை இறைத் தண்டனை என்றும்; வினைப்பயன் என்றும்;  சான்றோர் கூறுவதுண்டு. அறநீதியின் செயல் முறையிலிருந்து  எவருமே தப்ப முடியாது.ஏன்? அறநீதி ஒருபோதும் தவறுவதில்லை.



Friday 8 April 2011

சினத்தை வெல்லும் வழி


சினம் கொண்டு  பெறருக்குத் தீங்கிழைப்போர், இவ்வாறு சிந்திக்க வேண்டும்:

பிறர் த‌ம் மன‌தில் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைத்தால், அது எனக்கு வேதனையும் துன்பமும் தருமே! அது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லையே!  அதுபோல், நான் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைத்தால், அது அவருக்கும் வேதனையும் துன்பமும் தருமே! அது அவருக்கு மகிழ்ச்சி  தராதே!

பிறர் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைப்பதை விரும்பாத நான், எப்படிச் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைப்பது?அது எனக்கு வேதனையும், துன்பமும் தருமே! அது  அவருக்கு மகிழ்ச்சி தராதே.

சினம் கொண்டு தீங்கிழைப்போர், அதன் காரணமாகவே  தம் பெருமையை இழைப்பார்களே! பிறரால் வெறுக்கப்படுவார்களே!


சினம் கொண்டு தீங்கிழைப்போர், தீங்கிழைத்ததன் காரணமாகவே இங்கும்  தண்டிக்கப்பட்டு, உடலைவிட்டு உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும் தண்டிக்கப் படுவார்களே!

இவ்வாறு சிந்தித்து, சினத்தை தீமை என அறிந்து, அதன் மேல் வெறுப்படைந்து, அதை விட்டுவிட வேண்டும். அதை மறந்துவிட வேண்டும்.

வாழ்வில் சுகத்தையும், அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும் கெடுக்கும் சினத்தை  மறப்பதால் நன்மையே வரும்,  தீமை ஏதுமில்லை. சினத்தை அணைத்துக் கொள்வதால் துன்பமே வரும், நன்மை  ஏதுமில்லை. ஆகவே, சினத்தை மறந்தோருக்கு சினத்தால் இனி துன்பமே இல்லை.

எவருடைய குற்றங்குறைகளும், தாமாகவே விலகுவதில்லை. சினமும்  அதுபோல்தான்.  உடலுக்கு நோய் வந்தால், தக்க மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். அதுபோல், தம்முள்ளிருந்தே தம்மைக்  கொள்ளும்  சினத்தையும் தக்க முறைகளால்தான் வெல்ல வேண்டும்.

கோபத்தினால் மாசுபட்டுள்ள மனத்தையும் சரியான முறைகளால்தான் சுத்தப்படுத்த முடியும்.

அதாவது, சரியான பயிற்சிகளால்தான் சினத்தை வெல்ல முடியும். சினத்தின் பிடியிலிருந்து  மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 1) ஆய்வும் நுண்ணறியும்
2) உறுதி கொள்ளுதல்
3)மன்னிப்புக் கோருதல்
4)பிறர் பிழை பொருத்தல்
5)விழிப்புணர்வும் நிதானமும்
6)பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும்
7) இடைவிடாத முயற்சி