Sunday 20 March 2011

பக்திக்கு அடிப்படை நல்லொழுக்கம்

(துறவி அவர்கள் ஆற்றிய உரையின்  பகுதி)

             எதற்காக நாம் பக்தி கொள்ள வேண்டும்?

             நாம் நம்மையே ஆராய்ந்து பார்த்தோமென்றால், நம்மிடையே பல‌ குறைபாடுகள்  இருப்பதை உணரலாம். குறைபாடுகள் என்பது  நம்மிடையே உள்ள‌ குற்றம் குறைகள்.

         உதாரணத்திற்கு, பிறர் செல்வாக்கைக் கண்டு  பொறாமைப் பட்டிருப்போம்; பொறாமையினால் குற்றமற்றோர் மீது குற்றம் சுமத்தியிருப்போம்; குற்றம்   செய்துவிட்டு அது  நியாயமானதே  என்று விவாதித்திருப்போம்;  நம் குற்றத்தை மறைக்கப் பிறர் மீது பழிசுமத்தியிருப்போம்; நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்திருப்போம்; தற்பெருமையில் தன்னை உயர்த்தியும், பிற‌ரைத் தாழ்த்தியும் பேசி  இருப்போம்;  நல்லோரின் நல்லொழுக்க நெறிகளைப் பரிகாசித்திருப்போம்; சினம் கொண்டு வைதிருப்போம்; சண்டை சச்சர‌வு செய்திருப்போம்; பிறரைப் பழித்துப் பேசியிருப்போம். இதுபோல் பல குறைபாடுகள் நம்மிடம் இருப்பதை நாம் உணரலாம்.   

             நம்மிடமுள்ள குறைபாடுகளை, நம்மிடமுள்ள அசுத்தங்கள் என்று பெரியோர் கூறுவர். நம்மிடம் பல அசுத்தங்கள்  உண்டென்பதால், நம்மை தூய்மையற்றோர் என்றும், அசுத்தமானவர்கள் என்றும், பெரியோர் கூறுவர். புறத்தே நாம் உடலைக் கழுவி ஆடை ஆபர‌ணங்களால் அழகுபடுத்திக் கொண்ட போதிலும், அகத்தே நம்மிடம் பல குறைபாடுகள் உண்டென்பதால், நம்மை அசுத்தமானவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

            நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் நலனைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் பொருளை அழிக்கும்; நம் சுகத்தைக் கெடுக்கும்; உள்ளிருந்தே கொல்லும் நோயைப் போல், நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் வாழ்வைக் கெடுக்கும்.

            எப்படி நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்குவது?

            பக்தியினால் நம்மிடமுள்ள  அசுத்தங்களை நாம் போக்கலாம். அதாவது, தூய்மையற்ற நாம் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கும்; அசுத்தமான  நாம் நம்மைப் புனிதமாக்கிக் கொள்வதற்கும்; மாசு படிந்துள்ள நம் மனத்தை  நாம் தூய்மை படுத்திக் கொள்வதற்கும்; நாம் பக்தி கொள்ள வேண்டும். உள்ளத்தில் க்தி  கொண்டு,  நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்கினோமென்றால்,  இவ்வுலக வாழ்விலும் சுகம் பெற்று; உடலைவிட்டு  உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும்  தெய்வலோக சிறப்பைப் பெறலாம். இதுவே பக்தி கொள்வதற்கான நோக்கமாகும்.

             உடலில் அழுக்கு இருந்தால் அதை எப்படிப் போக்குவது?

           நீராலும், குளிக்க உபயோகிக்கும் சவர்க்காரத்தினாலும், உடலைச் சுத்தப்படுத்துபவரின் முயற்சியாலும் உடலில் இருக்கும் அழுக்கைப் போக்கலாம். இதுவே உடலைச் சுத்தப்படுத்துவதற்கான சரியான முறையாகும்.

              அதுபோல், தூய்மையற்ற நாம், சரியான முறையால் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.அசுத்தமான நாம் சரியான முறையால் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்; மாசுபடிந்துள்ள நம் மனத்தைச் சரியான முறையால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
              எந்த சரியான முறையில்?

              இறைவனின் அருளால் சான்றோர் அருளியுள்ள தர்ம உபதேசங்களை (ந‌ன்னெறி உபதேசங்களை) கற்க வேண்டும். அல்லது, கல்வி அறிவும் அன்பும் அறமும் பக்தியும் உள்ள நல்லோரை நாடி, அவர்கள் கூறும் தர்ம உபதேசங்களை நம்பும் மனத்துடன் கேட்க வேண்டும்.

               தர்ம  உபதேசங்களை நம்பும் மனதுடன் கேட்கும் ஒருவர், "பாவம் உண்டு; புண்ணியம் உண்டு; நல்வினை உண்டு; தீ வினை உண்டு; நல்லொழுக்கம் உண்டு; தீயொழுக்கம்  உண்டு; செயல்களுக்குப் பிற்பயன் உண்டு; அடுத்த உலகம் உண்டு; அடுத்த உலகில் உயிர்கள் தம் செயல்களின் பலனை அனுபவிக்க வேண்டும்" என இவர் புரிந்து கொள்வார்.

             "குற்றங்களைத் தவிர்த்து, நல்லொழுக்கங்களை  மேற்கொண்டு, நற்கருமங்களைச்
செய்து ந
ல்வாழ்வு வாழ்வோர், இவ்வுலக வாழ்விலும்  சுகம்  பெறுவார்கள்; மரணத்திற்கு அப்பால் அடுத்த உலக வாழ்விலும் தெய்வலோகத்திலும் பிறந்து சுகம்பெறுவார்கள்," என இவர் புரிந்து கொள்வர்.

           இவை யாவற்றையும் புரிந்து கொண்ட இவர், அறியாமையில் இருந்து விலகி, அறிவுடைமையைப் பெறுவார். அறிவுடைமையைப் பெற்ற இவர், த‌ம்மிடமுள்ள அசுத்தங்களைக் காண்பார். அறிவுடைமையினால் தம்மிடமுள்ள அசுத்தங்களைக் கண்ட இவர், அடுத்து அசுத்தங்களைப் போக்க முயற்சி செய்ய வேண்டும்.

              எப்படி முயற்சி செய்ய வேண்டும்?

             உள்ளத்தில் பக்திக் கொண்டு,  இதுநாள்வரை செய்துள்ள குற்றங்களுக்காக உள்ளம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இனிமேலும் இது போன்ற குற்றங்களைச் செய்வதில்லை என உறுதி பூண்டு, தீயொழுக்கத்தில் இனிமேலும் செல்லாமல் தம்மைக் காத்து, நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

             குற்றங்களைத் தவிர்க்கவும், நல்லொழுக்க நெறிகளை மேற்கொள்ள‌வும், மனம் தளர்ச்சி அடையாமல் போராட வேண்டும். மனம் தளர்ச்சி அடையாமல் போராடினாரென்றால், படிப்படியாக அசுத்தங்கள் இவரை விட்டு விலகும். பக்தியிலும் அறத்திலும் நற்குணங்களிலும் நற்பண்புகளிலும் இவர் வளர்ந்து தூய்மை அடைவார். இவ்வுலக வாழ்விலும்  இவர் சுகம் பெறுவார்; மரணத்திற்கு அப்பால் மறு உலகில் தெய்வலோகத்தில் பிறந்து சுகம் பெறுவார்.


           



1 comment:

  1. மனம் தளர்ச்சி அடையாமல் போராடினாரென்றால், படிப்படியாக அசுத்தங்கள் இவரை விட்டு விலகும். //
    ஆழ்ந்த கருத்துக்கள்.

    ReplyDelete