Monday 25 April 2011

திட்டமிட்ட செயல்களும் வினைப்பயனும்

நாம் திட்டமிட்டு வேண்டுமென்று செய்யும் செயல்களின் வினைப்பயனிலிருந்து தப்ப முடியாது.

நாம் மனதால் விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குக் கரும பலன் உண்டென்றும், அவற்றின் கருமபலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை என்றும் பகவான் புத்தர் கூறியுள்ளார்.

"திட்டமிட்டுச் செய்த கருமங்களின் பலனை அழிக்க முடியாது; கரும பலனிலிருந்து தப்ப முடியாது; அவற்றின் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. இந்த உலக வாழ்விலோ, அல்லது எதிர்கால பிறப்பிலோ அவற்றின் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. திட்டமிட்டுச் செய்த தீய கருமங்களின் துன்பப் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.

திட்டமிட்ட செயல்கள் என்பது, நாம் மனதால் விரும்பி வேண்டுமென்று செய்யும் செயல்களாகும். அதாவது நாம் மனதால் விரும்பி எண்ணும் எண்ணங்களும்,மனதால் விரும்பி பேசும்  சொற்களும், மனதால் விரும்பி உடலால் செய்யும் செயல்களும் வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களாகும்.

நாம் மனதால் விரும்பி, திட்டமிட்டுச்   செய்யும் செயல்களின் கரும பலன்களிலிருந்து தப்ப முடியாது. என்கிறார் பகவான் புத்தர். அவை நற்செயல்களாயினும், தீய செயல்களாயினும், அதன் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.இப்பிறப்பிலோ அல்லது எதிர்கால பிறப்பிலோ, அவற்றின் பலனைஅனுபவிக்கத்தான் வேண்டும்.

விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தீய செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு லாபமும், இன்பமும் கிடைத்தாலும், பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்கால பிறப்புகளிலோ,அதன் துன்பப்பயனை வருந்தி, புலம்பி, அனுபவிக்கத்தான் வேண்டும். விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நல்ல  செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு நஷ்டம் வந்த போதும் ,பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்க்கால பிறப்புகளிலோ,அதன் புண்ணியப்பயனை  இன்புற்று, மகிழ்வுடன் அனுபவிப்பான்.

வினை பயனிலிருந்து தப்பமுடியாதாகையால், துன்பத்தை விரும்பாதவன், எவரொருவருக்கும் துன்பம் தரும் செயல்களைச் செய்யக்கூடாது  என்கிறார் பகவான் புத்தர்.

"எவரொருவர் துன்பப்பட விரும்பவில்லையோ, அவர் தீய  செயல்களைச் செய்யக்கூடாது. இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்."

2 comments:

  1. அருமையான படைப்பு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மிக அருமையான விளக்கம். நன்றி, ஐயா.

    இந்த வினைப்பதிவுகள், கர்மவினைகள் என்றெல்லாம் கேள்விக்கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு மகான் இதுநாள்வரை அடியேன் கேட்டிராத ஒரு தகவலைச் சொன்னார். இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வாசகர்கள் ஆன்ம விசாலத்துக்குப் பயன் பெறும்.

    அதாவது விதியை, ஜீவன்விதி என்றும் சிவன்விதி என்றும் பார்க்கிறார்கள். ஜீவன்விதி என்பது மனிதர்களின் மனங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட விதி.சிவன்விதி என்பது ஏக இறைவனால் ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மாவிற்குள்ளும் பதிக்கப்பெற்றுள்ளவிதி.

    பொதுவாக மதங்களும் மார்க்கங்களும் ஜீவன்விதிகளைப் பற்றியும் ஒழுக்கமுறைகளைப் பற்றியுமே பேசும். சிவன்விதியை உணர்த்தாது.

    உதாரணத்திற்கு ஜீவன் விதிப்படி திருடுவது குற்றம். ஜீவன் விதியைப் பின்பற்றும் சமுதாயவிதிப்படி தண்டனைக்குரிய குற்றம்; கர்மவினைப்பதிவு கட்டாயம் உண்டு. தப்பிக்க முடியாது.

    அதே சமயத்தில், பறிகொடுத்தவர் திருடன்மீது இரக்கப்பட்டு அவனை மன்னித்து அன்புடனும் கருணையுடனும் 'பார்த்து' விட்டால் உடனே அது 'சிவன்விதியாக' மாறிவிடும். கர்மவினைப்பதிவு அப்போதே கழிந்துவிடும். அதாவது, ஜீவன்விதிக்கு அறிவும் தண்டனையும் அடிப்படை; சிவன்விதிக்கு அன்பும் கருணையும் அடிப்படை.

    ReplyDelete